புதன், 20 நவம்பர், 2013

சேரனும்..டூரிங் டாக்கீஸூம்!!

 னந்தவிகடனில் தொடராய் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் சேரனின் 'டூரிங் டாக்கீஸ்' புத்தகத்தை சமீபத்தில் வாசிக்க கிடைத்தது.மிகப்பெரிய இலக்கியமோ,அல்லது இப்போது சிலர் வலுகட்டாயமாக தங்கள் எழுத்துகளில் திணிக்கும் பின்நவீனத்துவம்,முன்நவீனத்துவம்(!) போன்ற எந்த குறியீடுகளும் இல்லாமல்,தான் எப்படி எளிய மனிதனாய் இருக்கிறாரோ..அதே போலானதொரு எளிய மொழியில் தான் கடந்து வந்த பாதையை பற்றி பேசுகிறார்.அந்த எளிமையால் தானோ என்னவோ,பக்கத்துக்கு பக்கம் உணர்ச்சிக்குவியல்களாய் நிறைந்து கிடக்கிறது புத்தகம் முழுதும்!


மதுரைக்கு பக்கத்தில் பனையூர்பட்டி என்ற குக்கிராமத்தில் தொடங்கிய சினிமா மீதான கனவு..எப்படி தலைநகர் வரை சிறகுவிரித்து பறந்தது என்பதை சுவாரஸ்யமாய் சொல்லி செல்கிறார்.ஒரு இலக்கை அடைந்ததும்,அந்த வெற்றி மட்டுமே எல்லோராலும் பெரிதாய் கவனிக்கப்படும்.ஆனால் அந்த வெற்றிக்கு பின்னாலிருக்கும் முகத்தில்அறையும்நிஜமும்,அதுதரும் வலியும் யாரும் அறியாதவை!அந்த வலிகளை எல்லாம் உரமாக்கி,வெட்டவெட்ட மீண்டும் வீரியமாய் முளைத்தெழுபவர்களாலயே சாதிக்க முடிகிறது.அப்படியானதொரு வெற்றியும்..அதற்கு பின்னாலிருக்கும் வலிகளையும் பற்றியுமே அதிகம் பேசுகிறது இந்த புத்தகம்.

பனையூர்பட்டி கிராமத்தில் சிறுவனாய் சுற்றி திரிந்த பால்யமாகட்டும்..படிக்கிற வயதில் கண்கள்முழுக்க சினிமா ஆசைகளோடு,புத்தகமூட்டைக்கு பதிலாய் கனவு மூட்டையை சுமந்து திரிந்ததாகட்டும் ஒவ்வொன்றும் அப்படியே காட்சியாய் கண்முன்னே நிழலாடுகிறது.சேரனின் படங்களில் வரும் கதை மாந்தர்களாய் நாம் பார்த்த  பலரும்..அவரின் வாழ்க்கையில் உண்மையில் வாழ்ந்த நபர்களாகவே இருக்கிறார்கள்.

சேரனை பற்றி இந்தபுத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டதை விட அவரின் குடும்பமான அம்மா கமலா டீச்சர்,எம்.ஜி.யார் ரசிகரும் தியேட்டர் ஆப்பரேட்டருமான அப்பா பாண்டியன்..உழைப்பையும் வைராக்கியத்தையும் தவற வேறேதும்தெரியாத அவரின் பாட்டி தெய்வானை ஆகியோரை பற்றி தெரிந்து கொண்டது அதிகம்.யோசித்துபார்த்தால்,இதுபோன்ற உறவுகள் தந்த பலத்தால்தான்..எத்தனைமுறை விழுந்தாலும் அத்தனைமுறையும்,முன்பைவிட அதிகவீரியத்தோடு எழுகின்ற சக்தி அவருக்கு கிடைத்திருக்கவேண்டும்.அதேபோல் நல்லவாழ்க்கை கிடைத்ததும்..அம்மா அப்பாவை தாஜ்மகாலுக்கு அழைத்துபோய் சந்தோசப்படுத்தியாதாகட்டும்..ஆட்டோகிராப் படத்திற்கான தேசிய விருதை,அப்துல் கலாம் அவர்கள் கையால் தன் தந்தையை பெறவைத்து,அவரை திக்குமுக்காட வைத்ததாகட்டும்...சேரன் உண்மையிலேயே பிரமிப்பு தான்!!

வாழ்க்கையை பற்றிய நிஜங்களுக்கும் பஞ்சமில்லை இதில்..ஒரு இடத்தில் சொல்கிறார்,"எந்த மனிதர்கள் நாம் கஷ்டப்படும்போது,ச்சே பாவம்யா ரொம்ப சிரமப்படுறான்..நல்லா வந்துரனும் என சொல்கிறார்களோ..அவர்களே நாம் கொஞ்சம் ஜெயிச்சதும்,பார்றா இவனுக்கு வந்த யோகத்தை என்பார்கள்" இதுதான் உலகம் என்கிறார்.எத்தனை நிதர்சனம்!!அனுபவத்தை தவிர வேறு யாரால் வாழ்கையை இப்படி அணுஅணுவாய் கற்றுதந்துவிட முடியும்?!

சினிமா எனும் கனவுதேசத்தில் தங்கள் கனவும் நினைவாகிவிடாதா? என ஏங்கிதிரியும் லட்சகணக்கான மனிதர்களுக்கு இந்த புத்தகம் ஒரு தன்னம்பிக்கை டானிக்!வெற்றி பெறுவது மட்டும் போராட்டமல்ல,அதை தக்கவைத்து கொள்வதும்,அந்த வெற்றியை தலைக்கு ஏற்றிவிடாது வாழ பழகுவதும் ஒரு போராட்டமே என்பதுதான் டூரிங் டாக்கீஸின் மொத்த அனுபவமும்!!இயக்குனராய் பாதித்ததைவிட,எழுத்தாளராய் சேரன் நிரம்பவே பாதித்துவிட்டார்.
இந்த புத்தகம் வாசிக்க கிடைத்தால் கண்டிப்பாக மிஸ் செய்து விடாதீர்கள்!

வியாழன், 14 நவம்பர், 2013

தேங்க்யூ சச்சின்!!

 எல்லாவற்றிற்கும் நன்றி சச்சின்!இந்தபதிவை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்...அல்லது இப்படித்தான் ஆரம்பிக்க முடியும்!ஏனெனில் எனக்கு சச்சின் என்ற மனிதனை பற்றி தெரிய ஆரம்பித்த பின்னர்தான் கிரிக்கெட் என்ற விளையாட்டே தெரிய ஆரம்பித்தது!அந்த சாதனையாளனை பற்றி எல்லோரும் எல்லாமும் சொல்லியாகிவிட்டது..ஆனாலும்பதினாறு வருடங்களுக்கும் மேலாக தனது மட்டையால் எத்தனை நெஞ்சு படபடக்கும் தருணங்கள்,எத்தனை சோகம்,எத்தனை சந்தோசம்,எவ்வளவு பெருமிதம்..இத்தனையும் எனக்கு தந்த அந்த மனிதனுக்கு,இந்த எழுத்துகளை தவிர,வேறெதை பரிசாக தந்துவிட முடியும்?!


இந்த பதிவை எழுத எத்தனிக்கையில் சச்சின் தனது 200வது போட்டிக்காக களம் இறங்கிகொண்டிருக்கிறார்..அரங்கமேஅதிர்கிறது கரகோஷத்தால்!கிரிகெட்டை பற்றி அறியாத ஊரிலிருந்து யாரேனும் இதை பார்த்தால் ஒரு தனிமனிதனுக்கு எதற்கு இத்தனை பாராட்டுகள்,அவர் ஒய்வுக்கு ஏன் இத்தனை ரசிகர்கள் கண் கலங்குகின்றனர் என தோன்றக்கூடும்..இவை எல்லாவற்றிற்குமான விடை இன்றைய போட்டியிலேயே இருந்தது. எத்தனை கரகோஷம் ஒலித்தாலும்,இது அவருக்கு 200வது டெஸ்ட் மேட்ச் என்றாலும் முதல் போட்டிக்கு களமிறங்கிய போதிருந்த அதே ஆர்வத்துடனும்,ஈடுபாட்டுடனும் களமிறங்குகிறார்..அதுதான் சச்சின்..அதற்காக தான் இத்தனை கோடி ரசிகர்களும் அவரை கொண்டாடுகின்றனர்!



இங்கு சச்சினின் சாதனைகளையோ,அல்லது அதன் புள்ளி விவரங்களையோ பற்றியோ பேசப்போவதில்லை.ஒருவேளை அதைபற்றி பேச ஆரம்பித்தால் அதற்கு இந்த ஒரு பதிவல்ல இன்னும் எத்தனை பதிவுகள் எழுதினாலும் போதாதுஎன்பதுதான் உண்மை.! 90களின் மத்தியில் வளர்ந்த குழந்தைகளுக்கு சச்சின்ஒரு ஆதர்ச நாயகன்.அவரைப்போல நாமும் வரவேண்டும் என்று எண்ணாத சிறுவர்களே இருக்கமுடியாது..அந்த அளவுக்கு சச்சின் குழந்தைகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.

இப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை தவான்,ரோஹித் சர்மா,வீராட்,தோனி என மிக வலுவானது.ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சச்சின் களத்தில் நிற்கும் வரையே இந்தியாவின் பேட்டிங் பலம் நிலைத்திருக்கும்.அவர் அவுட்டானதும் 'இன்னைக்கு மேட்ச் அவ்ளோதாம்பா' என டிவியை அணைத்துவிடுவது வழக்கம்.! 28ஆண்டுகால தவத்திற்கு பின் இந்தியா இரடண்டாவது முறையாய் உலககோப்பையை வென்றபின்,வெற்றி கொண்டாட்டத்தின் போது,இளம் வீரர்கள் சச்சினை தோலில் ஏற்றி மைதானத்தை வலம்வந்தனர்.அப்போது அவர்கள் சொல்லியது இதைத்தான்,'இத்தனை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சச்சின் தனியாளாக தோலில் சுமந்தார்..இன்று நாங்கள் அவரை சுமக்கிறோம்' என்றனர்!சத்திய வார்த்தைகள்..


இனி சச்சினை மைதனாத்தில் மட்டையோடு,கிரிக்கெட் உடை சகிதம் பார்க்க முடியாது.தனித்தன்மையான அவரின் "ஷாட்'டுகளும் இனி காணக்கிடைக்காது.சகித்துக்கொள்ள முடியாத உண்மை தான்!ஆனாலும்,உன்னை நினைத்து பெருமைகொள்வதற்கு ஆயிரமாயிரம் தருணங்கள் இருக்கிறது எங்களிடம்.தன்னம்பிக்கை என்றால் என்ன? எழுவது வெற்றியல்ல..விழுந்தபின் முன்னைவிட அதிக உத்வேகத்துடனும்,உறுதியுடனும் எழுவதே வெற்றி என்று அடுத்த தலைமுறைக்கு வாழ்ந்து காண்பித்துவிட்டு செல்கிறாய்! சக தோழனை வழியனுப்புவது போலொரு தருணம்..கலங்கிய கண்களோடு வழியனுப்புகிறோம்..சென்றுவா சச்சின்...
தேங்க் யூ சச்சின் ஃபார் ஆல்!!!

செவ்வாய், 12 நவம்பர், 2013

இன்னும் ஓர் இரவு..!

 உங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தை பற்றிப்பேசவேண்டும்!அதைப்பற்றிபேச இதுதான் சரியான தருணம்.
ஏனென்றால்,நாளை...எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!ஆனால்..இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்லவேண்டும் என்றுதான் புரியவில்லை.
இதை உங்களிடம் சொல்வதால் என்ன ஆகிவிடப்போகிறது என்றும் தெரியவில்லை.ஆனால் யாரிடமாவது சொன்னால் தான் மனதிற்கு கொஞ்சமேனும் நிம்மதி கிடைக்கும் என்பதுபோல் தோன்றுகிறது.
அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி,என் பிரச்சனையை கேளுங்களேன்..அடிக்கடி எனக்கு ஒரு கனவு வருகிறது.
“ப்ச்..மனிதனுக்கு தூக்கம் வருவது இயல்பு..தூக்கம் வந்தால் கூடவே கனவு வருவதும் இயல்புதான்..இதில் என்ன பெரிதாய் சொல்வதற்கும்,கேட்பதற்கும் இருக்கிறது?” என சலித்து கொள்கிறீர்களா?!நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாய் கேளுங்கள்.
கனவுதான்..ஆனால் இதுவேறு மாதிரி!!கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாய் அந்தக்கனவு வந்து கொண்டிருக்கிறது..நேற்று இரவு வரையிலும்..!
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது..முதல்முறை அந்தகனவு வந்தது,நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது..பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறை நாட்கள் அவை.
ராமருக்கு பதினான்கு வருடங்கள் வனவாசம் என்றால் அந்த பதினான்கு வருட வனவாசத்தையும் ஒரே வருடத்தில் அனுபவிப்பதுதான் இந்த பனிரெண்டாம் வகுப்பு.நோ டி.வி,நோ கிரிக்கெட், நோ ஃப்ரெண்ட்ஸ்..இப்படி எக்கசக்க ‘நோ நோ’க்கள்..!
ஒருவழியாய் பொதுத்தேர்வுகள் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதியாய் சுவாசிக்கவே முடிந்தது!காலையில் பொறுமையாய் எழுவது..கொஞ்சநேரம் டி.வி,அப்புறம் நண்பர்களுடன் அரட்டை..மதியம் சாப்பாடு,அதன்பின் கிரிக்கெட் ஆட கிரவுண்டுக்கு சென்றால்,சூரியன் டுயுட்டி முடித்து மறையும் வரை விளையாட்டுதான்.!
அந்த நாற்பது நாட்களும் சொர்க்கமாய் கழிந்தன.ஆனால் நமக்குதான் நல்ல விசயங்கள் எதுவும் நீண்டநாள் நிலைக்காதே!
நாளிதழ்களில் இன்னும் இரண்டுநாட்களில் தேர்வுமுடிவுகள் வரப்போவதாய் செய்திவந்தது.அதைப்பார்த்த நொடியிலிருந்து தொண்டைக்கும் வயிற்றிற்கும் இடையே உருண்டை உருள தொடங்கியிருந்தது.!

இந்த தேர்வுகளை பொறுத்தவரை,நன்றாக படிப்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.அவர்களுக்கு தெரியும்..நிச்சயம் மாவட்டத்திலோ,பள்ளியிலோ குறைந்தப்பட்சம் வகுப்பிலேயோ முதல் சில இடங்களை பிடித்து விடுவார்கள் என!
அதேபோல் இந்த, ‘எதற்கும் டோன்ட் கேர்’ மாணவர்களுக்கும் தங்களது தேர்வுமுடிவு எப்படி இருக்குமென்பது முன்கூட்டியே தெரியும்.
அவர்களது கவலையெல்லாம் தேர்வுமுடிவுக்கு பின் எந்த டுடோரியலில் சேரவேண்டும்,அல்லது எங்கு சேர்ந்தால் கட்டணம் குறைவாய் இருக்கும்?என்பதைப்பற்றியதாய் தான் இருக்கும்.இதில் பிரச்சனையெல்லாம் சுமாராய் படிக்கும் என்னைபோன்றவர்களுக்குத்தான்..நிச்சயம் ஃபெயில் ஆகமாட்டோம் என்பது தெரியும் என்றாலும் எவ்வளவு மார்க் வரும்?என்பது கேள்விக்குறிக்கெல்லாம் பெரிய கேள்விக்குறி.

இதில் அப்பா வேறு அடிக்கடி,”ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கிடுவில்ல?..உன்னைய நம்பி,நான்வேற எல்லார்க்கிட்டயும்..பையன் ஆயிரத்துக்கு மேல வாங்கிடுவான்.எந்த எஞ்சினியரிங் காலேஜ்ல சேக்காலாம்னு பெருமையா கேட்டுகிட்ருக்கேன்.மானத்தை வாங்கிடாதே!”என்கிறார்.
அவர் கவலை அவருக்கு..எனக்கோ, முதலில் நாம் ஆயிரம்மார்க்குக்கு எழுதியிருக்கிறோமா?அப்படியே எழுதியிருந்தாலும் திருத்துபவர் சரியாய் திருத்துவாரா? அல்லது அவர்வீட்டில் போட்ட சண்டைகளின் எதிர்வினையை என் பேப்பரில் காட்டிவிடுவார?என்றெல்லாம் கவலை.
இப்படியாக ஏதேதோ யோசித்தவாறே அந்த இரண்டுநாட்களும் கழிந்தது.காலை விடிந்ததும் ரிசல்ட் பதட்டம் தொற்றிக்கொள்ளும்..இப்போது தூக்கம் வரவில்லை..ஆனால் தூங்காமலிருப்பதால் மார்க் ஏதும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று உள்மனம் பகடி செய்யவே,தூங்கலாம் என முடிவுசெய்து படுத்துவிட்டேன்.

அன்றுதான் முதன்முதலில் 'அந்த கனவு' வந்தது.
யாரோ என் அறையின் கதவை தட்டுகிறார்கள்..கொஞ்சநேரம் அமைதி..
மீண்டும் அதே ‘தட்,தட்’ என கதவு தட்டப்படும் சத்தம்.
பின் கதவை திறந்த்துக்கொண்டு ஏதோ ஒரு உருவம் உள்ளே நுழைந்தது..முகம் தெளிவாய் தெரியவில்லை..ஆனால் அது ஒரு பெண் உருவம்..என்னருகே வந்து,பேச ஆரம்பித்தது.
“என்ன?,நாளைக்கு ரிசல்ட்டை நினைச்சு பயந்துகிட்ருக்கியா?!”என்றது.
“ஆ..மாம்..அதிருக்கட்டும்..முதல்ல நீ யார்னு சொல்லு..என் ரூமுக்குள்ள என்ன பண்ணிகிட்ருக்க?” என்றேன்.
“நானா?நான்…உன்னோட நலம்விரும்பி,உனக்கு நல்லதுசெய்ய வந்துருக்கேன்..இந்த கதைகளிலெல்லாம்
வருமே..என்னதது?? ம்ம்!தேவதைகள்..அதுமாதிரி நான் ஒரு தேவதைன்னு நினைச்சிக்கோ!”
நான்,"அதெல்லாம் சரி..இப்போ எதுக்கு வந்திருக்கே?"
“அதான் சொன்னனே,உனக்கு ஒரு நல்லசெய்தி சொல்லன்னு.!நாளைக்கு வரப்போற ரிசல்ட்டுல நீ ஆயிரம் மார்க் எடுக்கமாட்டே!!"
“அய்யயோ!இதுதான் நல்லசெய்தியா?”என்றேன்,கொஞ்சம் பதட்டமும்,கோபமுமாய்.
"பயப்படாதே..ஆயிரத்துக்கு கொஞ்சம் கம்மியா தொள்ளாயிரத்து என்பது மார்க் எடுப்பே..உங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே எஞ்சினியரிங் காலேஜ்ல சீட் கிடைச்சிரும்"என்றது.
“நெசமாத்தான் சொல்றியா?”என கேட்க எத்தனிப்பதற்குள்ளாக அலாரம் அடிக்க.தூக்கம் களைந்தவனாய் வாரி சுருட்டி எழுந்துவிட்டேன்.

கனவில் நடந்ததையெல்லாம் நினைத்து பார்க்க..பார்க்க ஒரே குழப்பம்.பொழுதும் விடிந்துவிட்டது. சிலபல மணிநேர காத்திருப்புகளுக்குப்பின் ரிசல்ட்டை பார்த்த எனக்கு அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் சேர்ந்தே கிடைத்தது.
கனவில் அந்த பெண்(?!) சொன்னதுபோலவே தொள்ளாயிரத்து என்பது மதிப்பெண்கள் எடுத்திருந்தேன்.மார்க் குறைந்தது கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும்,இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் என்னைநானே தேற்றிக்கொண்டேன்.நல்லவேளை அப்பாவும் அதிகம் திட்டவில்லை..பின் ஒரு நல்ல எஞ்சினியரிங் காலேஜில் இடமும் கிடைத்தது.
அதன்பின் அந்த கனவைப்பற்றி மறந்தே போயிருந்தேன்..அதைப்பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவும் இல்லை.ஏனெனில் என்னாலேயே அதை முழுமையாய் நம்பமுடியவில்லை.

ஆனால் அதெல்லாம் அந்த சம்பவம் நடக்கும்வரை தான்..
கல்லூரியில் சேர்ந்தஉடனேயே என்வகுப்பில் படிக்கும் ரம்யா என்ற பெண்ணை காதலிக்க ஆரம்பித்திருந்தேன்.!ரம்யா எந்தவித அலட்டலுமில்லாத அழகுப்பெண்.அதென்னவோ தெரியவில்லை..நாம் பார்க்கும் பெண்களைத்தான் மற்றவர்களும் பார்ப்பார்கள்.அதே நிலைதான் ரம்யா விசயத்திலும்..எனக்கு தெரிந்தே ரம்யாவை நான்கு பேர் காதலித்தனர்.என் சீனியர்கள் உட்பட..!ஆனால் ரம்யாவின் கடைக்கண் பார்வைப்படும் பாக்கியம் யாருக்கும் கிடைத்தபாடில்லை.
என் காதலை சொன்னால் ஏற்றுகொள்வாளா..மாட்டாளா? எனக்குழம்பி தவித்த நாட்கள் அவை.

அப்போதுதான்,ஒரு இரவில் மீண்டும் அதே கனவு வந்தது.அதே கதவைதட்டும் சத்தம்..அதே பெண்முகம்.சென்றமுறைப் போலவே இப்போதும், அவளே பேசினாள்.
"நாளை காலை ரம்யாவிடம் உன் காதலைச்சொல்.அவள் ஏற்றுக்கொள்வாள்" என சொல்ல..கனவுக்கலைந்து விழித்துக்கொண்டேன்.
ரம்யாவிடம் இதைப்பற்றி பேசுவதற்கு தயக்கமாய் இருந்தாலும்,அந்த கனவை பரிசோதித்து பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் மேலோங்கவே,ரம்யாவிடம் மறுநாள் கொஞ்சம் பயத்தோடு என் காதலை சொன்னேன்.எந்த அதிசயத்தையும் எளிதில் நம்பமுடிவதில்லை..நமக்கு நடக்கும் வரையிலும்!ஆம்,ரம்யாவும் என்னை காதலிப்பதாகவும்,அவளே என்னிடம் சொல்வதற்க்குள் நான் முந்திக்கொண்டேன் என்று சொல்லி சந்தோசப்பட்டாள்.!பிறகென்ன,ஒரு ஆறுமாத காலம் என் வாழ்க்கையில் வசந்தக்காலம் தான்! 

எல்லாம் நன்றாய் போய்க்கொண்டிருந்த வேளையில் தான்,மூன்றாம்முறையாக அந்தக்கனவு வந்தது.கனவில் அந்தப்பெண்,
 "ரம்யா உனக்கு சரிப்பட்டு வரமாட்டாள்.அவளுடனான காதலை மறந்துவிடுவது தான் உனக்கு நல்லது.அவளைவிட நல்லப்பெண் உனக்கு வாழ்க்கைதுணையாய் கிடைப்பாள்"என்று இடியை தலையில் இறக்கி சென்றது.
முதல்முறையாக இந்தக்கனவு எனக்கு,ஏன் வருகிறது?என கோபம்கோபமாய் வந்தது.இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.ரம்யா என்னிடம் வந்து,தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும்,படிப்பு முடிந்த்ததும் அவரையே கல்யாணம் செய்ய சொல்லி அவளின் தந்தை வற்புறுத்துவதாகவும் சொன்னாள்.எனக்கு அதிர்ச்சி தான்..ஆனாலும் எதிர்ப்பார்த்திருந்த அதிர்ச்சி என்பதால் அதை தாங்கிக்கொள்ள முடிந்தது. 
அந்த நிமிடம் முதல்,நிச்சயம் இந்தக்கனவு விஷயம் சாதாரணமானது இல்லையென்பதை மட்டும் நம்ப தொடங்கியிருந்தேன்.
அதற்குபின் அந்த கனவு வரும் இரவுகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.முதல்முறை நான் வேலைக்காக இன்டர்வியு செல்லும்போது..
அப்பாவிற்க்கு உடம்பு சரியில்லாமால் போனபோது என, எப்போதெல்லாம் நான் குழப்பத்தில் இருக்கிறேனோ அல்லது முடிவுகள் எடுக்கமுடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறேனோ அப்போதெல்லாம் என் குழப்பத்தை தீர்ப்பதுபோல் அந்தக்கனவு வருவதும் வாடிக்கையாயிருந்தது.

வாழ்க்கையில் எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருப்பதாய் தோன்றிய நேரத்தில், திடீரென ஒரு பிரச்சனை.வழக்கமாய் பிரச்சனைகளுக்கு தீர்வாய் வரும் அந்த கனவுதான் ,இந்தமுறை பிரச்சனைக்கே காரணமாயிருந்தது!
நேற்று இரவும் அந்தக்கனவு வந்தது.ஆனால் வழக்கமாய் அந்தப்பெண்ணின் முகத்தில் இருக்கும் புன்னகை மறைந்து முகம் இறுகியிருந்தது.அது சொன்ன செய்தியும் கூட அப்படியொரு இறுக்கமான செய்திதான்.
அப்படி என்னதான் சொல்லியது என கேட்குறீர்களா?
"நீ இன்னும் இரண்டு நாட்கள் தான் உயிர் வாழப்போற!அதுக்குள்ளே நீ என்னவெல்லாம் செய்யனும்னு ஆசைப்படுறியோ எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிக்கோ"என்றது.
“என்னது நான் சாகப்போறேனா?!இன்னும் இரண்டு நாட்களிலேயா?!என்ன சொல்ற நீ..எப்படி?!” என்று முடிப்பதற்குள் உடம்பில் வியர்வை மழையாய் பெருக்கெடுக்க,தூக்கி வாரிப்போட்டு முழிப்பு வந்துவிட்டது.
இதோ இன்றோடு ஒருநாள் முடியப்போகிறது.இன்னும் ஓரு இரவே மிச்சமிருக்கிறது.இன்று இரவும் அந்த கனவு வரும்.இன்றாவது எப்படி சாகப்போகிறேன் என பதட்டப்படாமல் அவளிடம் கேட்கவேண்டும், என ஏதேதோ நினைத்தவாறே தூங்கிபோனேன்.
 
"டக்..டக்.டக்..” கதவை தட்டும் சத்தம் கேட்டது.ஆனால் இன்று வழக்கத்தை விட வேகமாய்...மிக வேகமாய்...தட்டிக்கொண்டே இருக்கிறது..
ஆர்வமிகுதியால் நானே தூக்ககலக்கத்தோடு சென்று கதவை திறேந்தேன்.
வெளியே….

"டேய்..விடிஞ்சு எவ்ளோ நேரம் ஆச்சு?!சீக்கிரமாய் போய் பால் வாங்கிட்டு வாடா.அப்பா ரொம்பநேரமா காபிக்காக காத்துகிட்ருக்கார்,அப்புறம் டிப்போ மூடிற போறாங்க"என்று புலம்பியபடி அம்மா நின்றுக்கொண்டிருந்தாள்!!
கண்களை கசக்கியபடியே அம்மாவை பார்த்தேன்.எல்லாம் மெல்லமாய் புரிய ஆரம்பித்தது.
ச்சே..அப்போ இவ்வளவு நேரம் கண்டேதேல்லாம் கனவா?!.
--------
(அதீதம்.காம் ஜூன் இதழில் வெளியானது.)

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளியும்..சிலபல கொசுவர்த்தி சுருள்களும்!!

 ண்டிகைகளின் முழு மகிழ்ச்சியையும் அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் குழந்தைகளாய் இருக்கவேண்டும்.அல்லது குழந்தைகளால் மட்டுமே பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடன் கொண்டாடமுடிகிறது.அப்படி சந்தோசங்களும்,கொண்டாட்டங்களும் நிறைந்த பால்யபருவத்து தீபாவளி பண்டிகையை பற்றிய நினைவுகோர்வைகளே இந்த பதிவு..



இப்போதுபோல் தீபாவளி அன்றுகூட மற்றநாட்களை போலவே பத்துமணி வரை தூங்குவதில்லை அந்தநாட்களில்..தீபாவளி வந்துவிட்டாலே தூக்கம் பிடிக்காத நாட்கள் அவை!ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே ஸ்கூல் கணக்கு நோட்டில் தீபாவளிக்கான 'கவுண்ட் டவுன்' தொடங்கிவிடும்..முப்பத்திலிந்து ஆரம்பித்து ஒன்று வரை வரிசையாய் எண்களை எழுதி,ஒவ்வொருநாள் முடிவிலும் அதை ஒவ்வொன்றாய் அடித்துகொண்டே வருவதில் ஒரு சந்தோசம்!!இன்னும் பத்துநாள் தான் இருக்கிறது எனும்போது பற்றிகொள்ளும் அந்த பண்டிகை பரபரப்பு..அதற்கேற்றார் போல் வீட்டிலும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.பலகாரம் செய்வதற்கு அரிசி கழுவி காயவைப்பதிலிருந்து,அதை மில்லுக்கு போய் ஒரு பெரிய  வரிசையில் காத்திருந்து அரைத்து வருவது வரை கொஞ்சமும் சலிப்பில்லாமல் செய்வோம்.அப்பத்தாவுடன் கதை பேசியபடியே,பலகாரம் சுட அவருக்கு உதவி செய்கிறேன் என்ற பேரில் உபத்ரவம் செய்து கொண்டிருப்போம்.



இன்னும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் தான் இருக்கிறது எனும்போது,புதுத்துணி எடுக்க அப்பா எப்படா கடைக்கு கூட்டிசெல்வார் என்றிருக்கும்.சமயத்தில் அவருக்கு இருக்கும் வேலைப்பளுவில்,ஒரு வேலை தீபாவளி வருவதையே மறந்துவிட்டாரோ என்றெல்லாம் கூட சந்தேகம் வந்துபோகும்!ஒருவழியாய் அவர் வேலையெல்லாம் முடிந்ததும் துணிக்கடைக்கு போவனும் என்ற செய்தி அம்மா மூலமாக தேனாய் காதில் பாயும்.அம்மா தான் எங்களுக்கும் அப்பாவுக்குமான இடைவெளியை நிரப்பும் செல்போன்..ஈமெயில்..மெசேன்ஜர் எல்லாமும்!!

புதுத்துணி எடுப்பது என்றால் எங்களுக்கு பிடித்ததை எடுப்பது என்பதல்ல..பிடித்திருப்பதாய் அப்பாவால் சொல்லப்பட்டதை அல்லது முடிவுசெய்யபட்டதை வழிமொழிவது அவ்வளவே..எது எப்படியோ அது புதுத்துணி..அது ஒன்று போதாதா?! ட்ரெஸ் எடுத்தவுடனேயே பாதி தீபாவளி கலை முகத்தில் வந்துவிடும்.புதுத்துணி எடுப்பதை விட,அதை போடுகையில் எப்படி இருக்கும் என்பதை பற்றி கனா காண்பதுதுதான் பெரும்பொழுதுபோக்காய் இருக்கும் அப்போது.துணி எடுத்தாச்சு..அடுத்து என்ன? வெடி தான்!


பொதுவாய் வெடி மட்டும் முன்கூட்டியே வாங்குவதில்லை..தீபாவளியன்று முதல்நாள் நள்ளிரவில் தான் வெடி வேட்டைக்கு செல்வது வழக்கம்!அப்போதுதான் விலை குறைவாக இருக்கும்..அதிகமாகவும் கிடைக்கும் என்றொரு எண்ணம்..ஆனால் உண்மையில் கடைசிநேர வியாபாரம் என்பதால் வெடியின் விலை தாறுமாறாய் இருக்கும்.ஆனாலும் அந்த கூட்டநெரிசலில் ஒவ்வொரு கடையாய் சென்று பேரம் பேசி வாங்குவதில் ஒரு சந்தோசம் இருக்கவே செய்யும்.ஒரு வழியாய் வெடி வாங்கி முடித்து வீடு திரும்பினால் கிட்டதட்ட இரவு மணி இரண்டு அல்லது மூன்றாகி இருக்கும்.வீட்டில் இருப்பவர்கள் பாதி தூக்கத்தில் இருப்பார்கள்.ஆனால் நமக்குதான் அந்த இம்சைபிடித்த தூக்கம் வராமல் கண்ணாமூச்சி காட்டி கொண்டிருக்கும்.

இதற்குள் ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க தொடங்கியிருக்கும்.ஆனால் எங்கள் வீட்டிலோ சாமி கும்பிட்டால் தான் பட்டாசை தொடவேண்டும் என்பது விதி.
புது டிரெஸ் ஆசையும்..பலகாரங்களின் வாசமும் சேர்ந்து  மனம் ஒருவித பரவசத்தோடயே இருக்கும்.நண்பர்கள் எல்லோரும் என்னமாதிரி ட்ரெஸ் எடுத்திருப்பார்கள்? ஏன் இந்த சூரியன் இன்றுமட்டும் இவ்வளவு நேரம் தூங்குகிறது(!)? என ஏதேதோ நினைத்தபடியே தூங்கியும் போயிருப்பேன். "டேய்,சாமி கும்பிடனும்..எல்லாரும் ரெடியாயிட்டாங்க..சீக்கிரம் போயி குளிடா"என அம்மா வந்து எழுப்பையில் வாரிசுருட்டி எழுந்து பார்த்தால் மணி ஆறாயிருக்கும்! ச்சே எப்படி தூங்கினோம் என உள்ளுகுள்ளேயே முனகிக்கொண்டு..தூக்ககலக்கத்துடன் அப்பா கையால் எண்ணெய் வாங்கி தலைக்கு வைத்துவிட்டு கண் எரியஎரிய குளியல் நடந்தேறும்.குளியல் முடிந்ததும் சாமி கும்பிடவேண்டும்.சாமி கும்பிடுவது என்றால்..கைகளை கூப்பியபடி கண்களை மூடியும் மூடாமலும்..சாமி படைத்திருக்கு அருகில் வைத்திருக்கும் புதுதுணிகளையும்,வெடியையுமே பார்த்தவாறு நிற்பது,அவ்ளோதான்!


சாமி கும்பிட்டதும்..புதுத்துணி அணிந்துகொண்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியபின் சாப்பிட உட்காரவேண்டியது தான்.என்னதான் இலை நிறைய பலகாரங்கள் இருந்தாலும் சாப்பிடபிடிக்காது கடமைக்காக கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு வெடிவெடிக்க சென்று விடுவோம்..புதுடிரெஸ் போட்டு கொண்டு,முதல் சரத்தை பற்ற வைக்கும்போது, மனம் அப்படி ஒரு நிறைவாய் இருக்கும்.அந்த புதுத்துணியின் வண்ணமும்,வெடிமருந்தின் வாசமும் மனசுமுழுக்க அப்பி கிடக்கிறது இன்னமும்!அந்த நாளின் முடிவில் மனம் மீண்டும்..அடுத்த தீபாவளி எப்போது வரும் என அப்போதிழுருந்தே காத்திருக்க தொடங்கிவிடும்!!

வெளியூருக்கு வேலைக்கு வந்துவிட்டபின்  தீபாவளியும்..சனி,ஞாயிறை போல் மற்றுமொரு விடுமுறை நாளாகிவிட்டது.சிலவருட இடைவெளிக்கு பின் மீண்டும் கடந்தஆண்டு தீபாவளிக்கு வீட்டில் இருக்க வாய்த்தது.இப்போது நினைத்தபடி எந்த டிசைனிலும் புது டிரெஸ் எடுக்கமுடியும்.அப்பா எதுவும் சொல்லமாட்டார்.எவ்வளவுக்கு வேண்டுமானாலும் வெடி வாங்கி ஆசை தீர வெடிக்க முடியும்.ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே ஒரு உள்ளுணர்வு.என்னாவாயிருக்கும் என யோசித்ததில், ஏதோ ஒன்று குறைந்ததே..அந்தகுறைந்த ஒன்றின் பெயர் 'பால்யம்' எனவும் இருக்ககூடும் எனப் புரிந்தது!

டிஸ்கி: நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!