ஞாயிறு, 22 ஜூன், 2014

ஒரு விஜய் ரசிகனின்(முன்னாள்) கண்ணீர் கதை!

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.மீறி யார் மனதேனும் புண்படுமேனால்,அதற்கு கம்பெனி 'ஒண்ணியும் பண்ணமுடியாது' என சொல்லிக்கொள்கிறது.
#################

கி.பி.1992 டிசம்பர் 4 -அன்றையதினம் உதித்த சூரியனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தமிழ்சினிமாவில்,ஏன் உலகசினிமாவிலேயே(!) தன்னைப்போல ஒளிவீசப்போகிற ஒரு நாயகன் உதயமாகப்போகிறான் என்று!பேரொளி கொண்டு நுரைபொங்க கரை தொட்ட அலைகளுக்கு தெரிந்திருக்கவில்லை,இவன்தான் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பின் தமிழ்சினிமா எனும் கடலில் மாபெரும் அலையாய் மக்கள் மனதில் வீசப்போகிறான் என்று ! (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ..போவோம்..போயித்தான் பாப்போமே!)..இவ்வளவு ஏன் அந்த நடிகருக்கே அப்போது தெரிந்திருக்காது..இந்த கருமமெல்லாம் நடக்கப்போகிறது என்று!!ஆனால் இதத்தனையும் நடந்தது.அன்று தான்,இத்தனை பெருமைக்குக்கும் சொந்தக்காரரான..அவரின் ரசிகர்களால் 'விஜய் அண்ணா' என்று அன்போடு அழைக்கப்படும் சாட்ஷாத் இளையதளபதி விஜய் அவர்களின் முதல் படம்  'நாளைய தீர்ப்பு' ரிலீஸ் ஆனது!


இந்த இன்ட்ரோ-வுக்காக பயங்கரமா மெனக்கெட்டாலும் ரிசல்ட் என்னவோ அவர் பட ஓபனிங்சாங் போலவே சற்றே டொங்கலாய் அமைந்திருப்பது காலாம் செய்த கோலம்!ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சியும்,சங்கவியும் அவரின் திரை வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டாலும் அவருக்கென்று ஒரு அடையாளம் கிடைத்தது பூவே உனக்காக திரைப்படத்திற்கு பின் தான்..யோசித்து பார்த்தால் அந்த காலத்தில் இருந்து இன்று வரை விஜய்க்கு எதிரி வேறு எங்கும் இல்லை.அவர் வீட்டுக்குள்ளயே அப்பா என்ற பெயரில் இருந்திருக்கிறார்.

கில்லி படத்தில் விஜய்க்கு கிடைத்த மாஸ் ஹீரோ அந்தஸ்திற்கு பின் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருந்தது.அதன்பிறகு திருப்பாச்சி,சிவகாசி,போக்கிரி என விஜய் தொட்டதெல்லாம் ஹிட் தான்.தொடர்ச்சியாய் இரண்டு படம் ஹிட்டடித்த்தும் நம்ம நடிகர்களுக்கு வரும் அரசியல் ஆசையும்,முதல்வர் நாற்காலி கனவும் விஜயையும் விட்டு வைக்கவில்லை.ஆரம்ப நாட்களில் தன்னை ஒரு தீவிர ரஜினி ரசிகனாக அடையாளபடுத்திகொண்ட விஜய்..அரசியல் ஆசை துளிர் விட்டதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகனாய் காட்டிகொண்டார்..மக்கள் திலகத்தின் பெயரை உச்சரித்தால் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியும் என்ற தீர்க்கதரிசனம் அன்னாருக்கு அந்த சிறுவயதிலேயே இருந்தது ஆச்சரியம்தான்!

சொல்லப்போனால் இங்கு ஆரம்பித்தது விஜய் ரசிகனுக்கு கண்டம். குருவி வில்லு சுறா வேட்டைக்காரன் என எத்தனை எத்தனை கண்டங்கள்..இந்த காலக்கட்டத்தில் தான் ஒவ்வொரு விஜய் ரசிகனும் எப்படி வலிக்காத மாதிரியே நடிக்கிறது என்பதை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான்..விஜய் ரசிகன்னு தெரிஞ்சா போதும் ரோட்ல சும்மா போறவன்கூட கூப்ட்டு வச்சி அடிக்க ஆரம்பிச்சானுக.இதுல உச்சபட்ச கொடுமை என்னன்னா  ராமராஜன் ஃபேன்ஸ்ல்லாம் எங்களை புடிச்சி வச்சி கலாய்ச்சானுக..ஆனா ஒண்ணுடா உங்ககிட்ட அந்த மாதிரி அடிவாங்குனதுக்கு அப்புறம் வேற எவன் அடிச்சாலும் தாங்கிக்குற சக்தி எங்களுக்கு வந்துருச்சிடா..சுறா படத்துல தியேட்டர்குள்ள மாட்டிகிட்டு கத்தி கதறி,சிக்கி சீரழிஞ்ச பின் எனக்குள் இருந்த விஜய் ரசிகன் பாதி காணாமல் போயிருந்தான்..மிச்சமிருந்த கொஞ்சமும் அரசியல் பிரவேசத்திற்காக அவர் செய்த செயல்களிலும்..சுயநலத்திற்காக அவர் அடித்த பல்ட்டிகளிலும் மொத்தமாய் காணாமல் போனது.

ஒருவழியாய் தொடர் தோல்விகளுக்கு பின் மீண்டெழுந்து காவலன்,நண்பன்,துப்பக்கின்னு ஹிட்டடிக்க ஆரம்பிச்சதுல விஜயை விடவும் அதிகம் சந்தோசப்பட்டது அவரின்  ரசிகர்கள் தான்..ஆனா விதி தான் வலியது ஆச்சே..ரெண்டு படம் ஹிட்டானதும் அண்ணனுக்கு மீண்டும் அதே அரசியல் ஆசை முதல்வர் நாற்காலி கனவு..இந்த முறை ஒரு படி அதிகம் போய் தனது அடுத்த படத்திற்கு 'தலைவா' என பெயர் வைத்து 'டைம் டூ லீட்' என சப்டைட்டிலும் வைத்தாயிற்று.இதற்கு இடையில் விஜயின் அப்பா வேறு, 'நான் அண்ணா,என் மகன் எம்.ஜி.ஆர்' என்று உச்சபட்சமாய் உளறி வைத்தார்..இப்போது புரிகிறதா வில்லன் வீட்டிலேயே இருக்கிறார் என நான் ஏன் சொன்னேன் என்று! இது  போதாதா?!ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி தலைவா ரிலீஸில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது..ஒருவழியாய் மன்னிப்பு கேட்டு சர்ச்சைகள் எல்லாம் முடிந்து படம் தியேட்டரில் வெளிவருவதற்கு முன்னே டிவிடி களிலும்,இணையத்திலும் வெளியாகிவிட்டது..டோரன்ட்டில் படம் பார்த்துவிட்டு அதற்கு நம்மவர்கள் ஃபர்ஸ்ட்  ஆன் நெட் விமர்சனமெல்லாம் எழுதியது வரலாறு..

இதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு சம்பவம் விஜய் அவர்களின் மீதிருந்த மொத்த மதிப்பையும் குலைப்பதாய் இருந்தது..அது,2011 ல் நாகபட்டினத்தில்  இலங்கை அரசால் தண்டிக்கப்படுவதை  எதிர்த்து விஜய் மற்றும் அவர் ரசிககளால் கண்டன பொதுக்கூட்டம்..அந்த கூட்டத்தில் விஜய் பேசியது தான் ஹைலைட்..இலங்கை அரசை பார்த்து 'நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு நாளு தூங்க மாட்டே' என ஒரு பஞ்ச அடித்தார் பாருங்கள்..வாழ்க்கையே வெறுத்து விட்டது.அது எத்தனை முக்கியமான விசயம்..எத்தனை மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை?!அதை எத்தனை நுட்பமாய் கையாளவேண்டும்.அதையெல்லாம் விடுத்து கைதட்டல் வாங்குவதற்காகவு ம்,தன்ரசிகர்களை உசுப்பேத்துவதாகவுமே இருந்தது அந்த பேச்சு முழுவதும்.

அவரு அரசியலுக்கு வந்தா உனக்கு என்னடா பிரச்சனை? என யாரேனும் கேட்பீர்களானால்,இது ஜனநாயக நாடு தான்..யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் தான்..ஆனால் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் தொடர்ந்து இரண்டு படம் ஹிட்டானதே முதல்வர் பதவிக்கு தகுதியும்,போதுமானதும் என நினைக்கும் மனநிலையே சற்று..இல்லைஇல்லை நிரம்பவே எரிச்சல் தருவதாய் இருக்கிறது.படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு இவர் ஒன்றும் எம்.ஜி.ஆரும் இல்லை..மக்களும் எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்தது போல் ஒன்றும் தெரியாதவர்களும் அல்ல...

கடைசியாய் ஒன்று,விஜய் அவர்களே..எத்தனை நெருக்கமான நபராய் இருந்தாலும்..தவறான வழிக்காட்டுதல் என தெரிந்தால்,அதை/அவரை உடனே புறக்கணியுங்கள்.நீங்கள் ஒரு நல்ல கலைஞன்..உங்களால் மற்றவர்களை சந்தோசபடுத்த முடிகிறது.அது ஒரு மாபெரும் வரம்.அதை செவ்வனே செய்யுங்கள்..மற்றவற்றை காலம் தீர்மானிக்கும்!Wish You A Very Happy Birthday IlayaThalabathi!

புதன், 18 ஜூன், 2014

அந்தி வானம்-சிறுகதை

எழுந்து கொல்லைபுறத்துக்கு போக வேண்டும்போல இருந்தது மாரியம்மாவுக்கு.வெளியே வானம்,இரவுமுழுக்க குடித்த இருள்எனும் மதுவின் போதையில் மயங்கிகிடந்தது.பக்கத்துவீட்டு கோணவாயன், மாட்டை கறவைக்கு அழைத்துசெல்ல தயார்படுத்தி கொண்டிருக்கும் சப்தம்கேட்டது.மணி நாலு இருக்கும் என நினைத்துக்கொண்டாள். எரிச்சலாய் இருந்தது மாரியம்மாவுக்கு.இப்படி நடக்கமுடியாம,ஒரு வெளியதெருவ போவகூட யாரோட உதவியாவது தேவையாய் இருக்கிறதே என தன்னையே நொந்துகொண்டாள்.அவள் இப்படி புலம்புவது இதுஒன்றும் முதல்முறைஅல்ல.வருஷகணக்காய் இதேநிலைமை தான்! எப்போது,அவளின் நடமாட்டம் குறைய தொடங்கியதோ அப்போதே, அவளை வாசல் திண்ணையின் ஒரு மூலையில் கொண்டுவந்து போட்டுவிட்டனர்.சொல்லப்போனால் மாரியம்மாவுக்கு,இந்த உலகில் வேறெதையும் விட அதிகம் நெருக்கமாய்இருப்பது,ஓரம் கிழிந்துபோய் கோரைகள் நீட்டியிருக்கும் அந்த பாயும்,மூத்திர வீச்சமடிக்கும் அந்த கம்பளிபோர்வையும் தான்.

இத்தனைக்கும் மாரியம்மா ஒன்றும்,ஒண்ணேஒன்னுன்னு பெத்து அதையும் கண்காணா தேசத்துக்கு பொழைக்க அனுப்பிவச்சிட்டு இங்க ஒத்தையில கிடக்கிறவ இல்ல.பிள்ளைகள் விசயத்தில் அவள் வாழ்வரசி. பொறந்தது மொத்தம் எட்டு புள்ளைக.அதுல அம்மை,பேரு தெரியாத வியாதின்னு வாரி குடுத்ததுபோக தப்பிப்பிழைச்சதுங்க அஞ்சு. மூணு பொண்ணு,ரெண்டு ஆணு!மாரியம்மாவுக்கு புருசன்னு வாய்ச்சவன் ஒரு குடிகார பய.மாசத்துல பாதிநாள் வீட்டுக்கு வந்தான்னா..மீதிநாள் ஆத்தங்கரையில சீட்டு விளையாடி கட்டியிருக்கிற வேட்டி வரைக்கும் அவுத்து குடுத்துபுட்டு,தோத்த சோகத்துல எவன்கிட்டாயாச்சும் அஞ்சுபத்துன்னு கடனைவாங்கி குடிச்சிபுட்டு கோவணம் அவுந்ததுகூட தெரியாம,ஆத்தங்கரை ஓரமா விழுந்துகிடப்பான்.

ஆனாலும் இவ எப்பவும் புருஷனை விட்டுக்கொடுத்தது கிடையாது. அப்படியே எவனாச்சும் எதாச்சும் சொல்லிபுட்டாக்கூட சாமியாடிருவா சாமி!அப்படித்தான் ஒருநாள் மாரியம்மா,குடிச்சிட்டு விழுந்து கிடந்தவனை கைத்தாங்கலா தூக்கிட்டு வர்றப்ப,எதுக்க வந்த ஊர்பெருசு ஒன்னு வாய வச்சிகிட்டு சும்மாஇருக்காம,அரை மயக்கத்துல இருந்தவனை பாத்து,

"ஏன்டா,இப்படி எப்பபாத்தாலும் சீட்டும்,குடியுமே கதின்னு கிடக்குறதுக்கு என்னத்துக்குடா உனக்கெல்லாம் ஒரு கல்யாணம் ஒருகுடும்பம்?"ன்னு எக்குதப்பா ரெண்டு வார்த்தையை உட்டுபுட்டான்."ஏன் மாரி, நீயாவது இதையெல்லாம் கண்டிக்ககூடாதா" ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள...
  "யோவ்,சும்மா நிறுத்துய்யா.ஊர்ல எந்த ஆம்பிளையா சீட்டாடல?இல்ல எவன் குடிக்காம இருக்கான்?என்னமோ எல்லாபயலுவளும் யோக்கியமா இருக்கமாதிரி இந்தாளை பேசவந்துட்டியே?இவ்வளவு ஏன்,உன் யோக்கித என்னன்னு எனக்கு தெரியாதா?பொழுது சாஞ்சா போதும், தலைக்கு முக்காட போட்டுக்கிட்டு வயக்காட்டு பக்கமா ஒதுங்குறவன் தானே நீயி? பெருசா பேசவந்துட்ட?!"என ஒரு உலுக்கு உலுக்கிவிட்டாள்.அதுக்கப்பறம் பெருசு வாயைதிறந்து ஒருவார்த்தை பேசுவானேன்?

என்னதான் கஞ்சிகுடிக்க கூட ஒழுங்கா காசு குடுக்காம,குடிச்சிபுட்டு விழுந்து கிடந்தாலும்..பொம்பளை விசயத்தில் மரியாம்மாவை தவிர வேறோருத்தியை நினைச்சி பாத்ததில்லை அவனும்.அதுனாலயே அவளுக்கும் தன் புருசனை பத்தி ஒரு கர்வமுண்டு! 


வாழ்க்கை அப்படியே கரும்பாறையை போல அசையாமல் ஓரிடத்தில் நின்றுவிடுவதில்லை.அது கூழாங்கல் போல..காலம் எனும் நதியின் ஓட்டத்திற்கு ஏற்ப அந்த கல் பயணித்து கொண்டேயிருக்கிறது.அப்படியான கால ஓட்டத்தில்,குடித்து குடித்து வாய்வயிறெல்லாம் வெந்துபோய் ஒருநாள் செத்தும்போனான் மாரியம்மாவின் புருசன்.வாழ்ந்தவரைக்கும் பெருசா சம்பாத்தியம்னு அவன் எதுவும் கொடுத்ததில்லை. ஆனால் போகும்போது மட்டும் மறக்காம அவளின் பூவையும்,பொட்டையும் வாங்கிட்டு போயிட்டான்.

மூத்தது மூணும் பொட்ட புள்ளைக.அதுலயும் மொத புள்ள,இப்பவோ அப்பவோன்னு குத்த வைக்க நேரம் பாத்துகிட்ருக்கு.கடைசி பய, இப்போதான் பால்குடியவே மறந்துருக்கான்.இப்படி நண்டுசிண்டுகளையா வச்சிகிட்டு இவ என்னத்த சமாளிப்பாளோ,எப்படி கரையேறப்போறாளோ என அக்கம்பக்கத்துல உள்ளதுக துக்கம்விசாரிச்சிட்டு ஆறுதல் சொல்வதற்கு பதிலாய் இன்னும் பயமுறுத்திவிட்டு சென்றார்கள்.

ஆனால் மாரியம்மா ஓயவில்லை.அவ வைராகியத்துக்கு பொறந்தவ. "நீ பொறக்கையில உன் அம்மா வயித்துக்குள்ள தலைசுத்தி போயி,உசுரோட உன்ன வெளில கொண்டுவர்றதே போராட்டமா போச்சு.அப்புறம் ஒருவழியா நீ பொறந்தப்ப,ஊரே அத அதிசயமா பேசிக்கிடுச்சி"என்பாள் அவளின் அப்பத்தா! 


புருஷன் செத்ததுக்கு அப்புறம் காலுக்கு சக்கரம்கட்டினது போல ஆகிவிட்டாள் மாரியம்மா.எப்போ எழுந்திருப்பா,எப்போ தூங்குவான்றதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.இன்ன வேலையின்னு இல்லாம,பண்ணையார் வீட்டு மாட்டுதொழுவத்தை கூட்டி பெருக்குறதிலிருந்து,ஆம்பிளையாட்டம் முழங்கால் வரைக்கும் புடவையை ஏத்தி கட்டிக்கிட்டு வயகாட்டுல உழுவுற வரைக்கும் ஒண்ணுத்தையும் விட்டுவைக்கல.'இவ என்ன இப்படி சாமி வந்தவமாதிரி வேலைப்பாக்குறாளே' என ஊர்க்காரர்கள் எல்லாம் பயந்துதான் போனார்கள்.

ஒருவழியாய் மூணு பொம்பளை புள்ளைகளுக்கும் அவள் சக்திக்கு ஏத்தமாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்துகொடுத்தாள்.மூத்தவன் ரைஸ்மில்லுக்கு வேலைக்குபோக ஆரம்பிச்சு ஆறுமாசத்திலேயே,ஒரு பெண்ணை பிடிச்சுபோய் இவளைத்தான் கட்டிப்பேன்னு வந்து நின்னான். பொண்ணு வசதி இல்லைதான்."ஆமா,நாம ரொம்ப வசதி..எனக்கு கல்யாணம்ஆனப்ப,ரெண்டு நூல் புடவையும்,தாலிக்கயிறுல ஒரு குண்டுமணி அளவுக்கு தங்கத்தையும் தானே,எங்கப்பன் சீதனமா கொடுத்தனுப்பிச்சான்"என அவளாகவே சமாதனப்படுத்திக் கொண்டாள்.


கடக்குட்டியும் படிப்பு சரியா வராததால,படிப்பை பாதியில விட்டுட்டு லாரியில் கிளீனர் வேலைக்கு போயிட்டான்.இன்ன நேரம் தான் வருவான், போவான்னு சொல்லமுடியாத வேலை.மாரியம்மாவுக்கு அவன் மீது எப்பவுமே பாசம் கொஞ்சம் அதிகம்.கடைக்குட்டின்றதால மட்டுமில்ல, அவன் அப்பன் ஜாடை அப்படியே அவனுக்கும்ங்கிறதனாலயும் தான்!

மனசு சொல்றதை அப்படியே உடம்பு கேக்குற வரைக்கும் தான் வாழ்க்கை நிம்மதியாயிருக்கும்.மாரியம்மாவிற்கு வயது அதன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது.சும்மாவா,சாப்பிடகூட நேரமில்லாம சக்கரமா சுழண்ட கட்டையாச்சே.அதுனாலதான் என்னவோ,இப்போ மொத்தமா ஓஞ்சிருச்சி போல உடம்பு என நினைத்துகொண்டாள்.அதுபோதாதென்று ஒருமுறை தண்ணி தூக்க போறேன்னு சொல்லி,குளத்தாங்கரையில் வழுக்கி விழுந்துவிட்டாள்.அன்று படுத்தவள் தான்.அது ஆச்சு வருஷம் ஒண்ணு! இடுப்புக்கு கீழே அசைவுகள் குறைந்து போய்விட்டது.ஒண்ணுக்கு போவக்கூட யாராச்சும் தூக்கிகிட்டு போனாத்தான் உண்டு.

லேசாய் வானம் விடிய ஆரம்பித்திருந்து.வெகுநேரமாய் மூத்திரம் அடக்கி வயிறு வலிக்க ஆரம்பித்திருந்தது மாரியம்மாவுக்கு."பெரியவனே, பெரியவனே"என கூப்பிட்டு பார்த்தாள்.கதவு திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.இடுப்பாலயே தேய்த்துதேய்த்து நகர்ந்துபோய் கதவருகில் சென்று கதவை தட்டினாள்.

"ஏன்மா, காலையிலேயே இப்படி படுத்துறே,சும்மா தட்டிகிட்டே இருக்காதே. இரு இரு வர்றேன்" என அலுத்துக்கொண்டே கதவை திறந்தான்.

"வாழ்ற வயசெல்லாம் பொசுக்கு பொசுக்குனு போய் சேருதுங்க. இந்த கிழத்தைப் பாரு. இன்னும் கிடந்தது நம்ம உசுரை வாங்குது" என உள்ளிருந்து மருமகளின் குரல் மட்டும் கதவை தாண்டி வெளியே வந்தது.

மாரியம்மாவுக்கு கண்கள் கட்டிக்கொண்டது.ஏற்கனவே இருந்த அரைகுறை பார்வையையும்,அந்த விழிநீர் படலம் இன்னும் அதிகமாய் மறைத்தது. ஒருகாலத்தில,இந்த புள்ளைங்க வயிறு நிறையனும்ங்கிறதுக்காக உக்காரகூட நேரமில்லாம ஓடிகிட்டு இருந்தவளை,இப்படி ஒண்ணுக்கு போவக்கூட அடுத்தவங்க உதவி தேவைப்படுறமாதிரி எழுதிட்டானே ஆண்டவன் என தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டாள்.கந்தலாய் கிடந்தவளை கையோடு சேர்த்து தூக்கியபடி,கொல்லைக்கு அழைத்துபோய் மீண்டும் தூக்கி வந்து படுக்கையில் போட்டான் மூத்தவன்.ஏனோ, வழிகின்ற கண்ணீரை மட்டும் அவளால் நிறுத்தமுடியவில்லை.அந்த உடலில் இப்போதைக்கு அதுமட்டும் தான் உருப்படியாய் வேலை செய்கிறது போல என நினைத்துகொண்டாள்.

வானம் நல்ல பிரகாசாமாகியிருந்தது.மருமக பிள்ளையை பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.பள்ளி வாகனம் வரும் சத்தம் கேட்டது. "பாப்பூம்மா,டிபன் பாக்ஸ்ல மதியத்துக்கு அஞ்சு இட்லி வச்சிருக்கேன். ஒழுங்கா எல்லாத்தையும் சாப்பிட்றனும்"என பாசம் பொங்க மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.எல்லா வேலைகளையும் முடித்தபின்பு, மாமியார் என்ற ஒரு ஜீவன் வீட்டில் இருப்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தவளாய்,தட்டில் ஒரு இட்லியை வைத்து கதவுக்கு அந்தப்பக்கத்திலிருந்து தட்டை மட்டும் தள்ளிவிட்டாள்.இப்போதெல்லாம் ஒரு இட்லி,ஒரு கைப்பிடி சோறு அதற்குமேல் கொடுப்பதில்லை அவளுக்கு.அதிகமா சாப்பிட்டா பொழுதனைக்கும் கொல்லதெருவ யாரு தூக்கிட்டு அலையறதுன்ற காரணம்தான் அதற்கு."கெழவி,இட்லியை தின்னுட்டு படுத்துக்க,எனக்கு கொள்ளை வேலை கெடக்கு" என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
 

வெகுநேரம் ஆகியும் அவள் சாப்பிடவில்லை.தட்டில் ஈ மொய்க்க ஆரம்பித்திருந்தது.எதையோ வெறித்து பார்த்தபடியே திறந்திருந்தன அவள் கண்கள்.இப்போது மாரியம்மாவின் கண்களிலிருந்து நீர் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இனி எப்போதும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரப்போவதேயில்லை!

(வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.)