சனி, 17 மே, 2014

என்ன செய்யப்போகிறீர்கள் ஸ்டாலின்?!

 இந்தியமக்கள் மட்டுமல்லாது உலகநாடுகள் அனைத்தும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த பதினாறாவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் ஒருவழியாய் வெளியாகிவிட்டன.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என எல்லா ஊடகங்களும் தங்களுக்கு யார் வரவேண்டும் என நினைத்தார்களோஅவர்களே பெரும்பான்மை பெறுவார்கள் என புள்ளி விவரத்தோடு கூவின.இந்த தேர்தல் முடிவகளை பொறுத்தவரை பி.ஜே.பி பெரும்பான்மை இடங்களை பெற்று மோடி பிரதமர் ஆவார் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்தது தான்.அதேபோல் இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கு மரண அடி கிடைக்கும் என்பதும் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று தான்.ஆனால் யாருமே எதிர்ப்பர்க்காத ஒன்று தமிழக தேர்தல் முடிவுகள்!தி.மு.க எதிர்ப்பு ஊடங்கள் கூட ஐந்து சீட்டுகள் கிடைக்கும் என்று சொல்லியிருந்த நிலையில்,ஒரு சீட்டு கூட அக்கட்சியால் பெறமுடியவில்லை.அதேபோல அதிமுக.விற்கு இத்தனை பெரிய வெற்றி கிடைக்கும் என அந்த கட்சியை சேர்ந்தவர்களே நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

தி.மு.க வை பொறுத்தவரை இந்த தேர்தலில் பல சவால்களை அவர்கள் சந்திக்கவேண்டியிருந்து.சென்ற சட்டசபைதேர்தலில் விழுந்த மரண அடியின் தழும்புகள் இன்னும் மிச்சமிருக்க,அந்த அடியிலிருந்து மீண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து..கட்சியின் ஆணிவேர் மு.க.வின் முதுமை வரை பல சவால்கள்.இதில் மு.க.வின் மூத்த மகனின் பங்காளி தகராறு வேறு.ஆனால் எல்லோரும் சொல்வதை போல் அழகிரியை அத்தனை பலம் பொருந்தியவராய் நான் நினைக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் அவர் தி.மு.க.வில் இருந்திருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகளில் பெரியதாய் எந்த மாற்றமும் இருந்திருக்காது!

இத்தனை பிரச்சனைகளையும் மீறி தி.மு.க வின் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றால் அதற்கு முழுக்காரணமும் ஸ்டாலின் தான்.நீண்ட காலமாகவே கட்சியின் தலைமையில்,அணுகுமுறையில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்த்திருந்தனர்.அந்த மாற்றம் இப்போதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது.காலம் தாழ்த்து நிகழ்த்தப்பட்ட மாற்றம் என்றாலும் ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்தபின் தான் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படிருகின்றன.காங்கிரஸை கழட்டி விட்டதிலிருந்து வாரிசுகளுக்கு சீட் கிடையாது என்ற சொன்னவரை அனைத்தும் பாராட்டப்படவேண்டிய திடமான முடிவுகள்.

சூறாவளி சுற்றுப்பயணம்,ஊடக வழி பிரச்சாரம் என அவர் கடமையை சரியாகவே செய்திருக்கிறார்.இவை அனைத்தையும் மீறி மக்களுக்கு இன்னும் தி.மு.க மீதான கோபம் தணியவில்லை என்பது தான் நிதர்சனம்.தேர்தல் முடிவுகளுக்கு பின் பத்திரிக்கையாளர்களிடம் "மக்களுக்கு இந்த முடிவுகள் சந்தோசம் என்றால் எங்கள்ளுக்கும் சந்தோசம் தான்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலினை அவரது சில நற்பண்புகளுக்காகவே பிடிக்கும்.இத்தனை வருட அரசியல் பயணத்தில் தோல்விகள் இல்லாது எந்த வெற்றியும் கைகூடாது என்பதை நன்றாகவே புரிந்தி வைத்திருப்பார்.இன்னுமும் தி.மு.க வின் பழைய வாக்கு வங்கி அப்படியேத்தான் இருக்கிறது.பிரச்சனை என்னவென்றால் அந்த வாக்குவங்கி விரிவடையாமல் அப்படியே இருப்பதுதான்.

இப்போதைய சூழலில் தி.மு.க.தொண்டர்களுக்கு தேவை இந்த தோல்விகளை மறந்துவிட்டு மீண்டும் களப்பணியாற்ற கூடிய உத்வேகமும்,உற்சாகமும்தான்.இன்றைய நிலையில் ஸ்டாலினை தவிர வேறு யாராலும் அதை தரமுடியாது.ஸ்டாலின் அவர்களே ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் வாழ்வும்,சாவும் தற்போது உங்கள் கைகளில்.இந்த பதிவிற்கு 'என்ன செய்யப்போகிறீர்கள் ஸ்டாலின்?' என கேள்விகுறியாய்தான் தலைப்பு வைத்திருக்கிறேன்.ஆனால் இதுபோன்ற பல கேள்விக்குறிகளை நீங்கள் ஆச்சர்யகுறியாய் மாற்றி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இனி உங்கள் தந்தையிடமிருந்து எதை கற்றுக்கொள்ளவேண்டும்,எதை கற்றுகொள்ளகூடாது என்பதை உணர்ந்துகொள்வதில் தான் இருக்கிறது உங்கள் வெற்றியின் சூட்சமம்!

மாண்புமிகு தமிழகமுதல்வருக்கு: பத்து மணிநேர மின்வெட்டு,பஸ் டிக்கெட் உயர்வு,வில்வாசி ஏற்றம் இன்னும் பல பல இருந்தாலும் மக்கள் இன்னுமும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு வரலாற்று வெற்றியை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.வெற்றி பெற்றதும் சட்டசபை,அண்ணா நூலகம் போல எதையாவது ஒன்றை மாற்றியே ஆகவேண்டும் என அடம்பிடிக்காதீர்கள்.மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் தெரியும்தானே?!

பொதுமக்களுக்கு: இனி அடுத்த எலெக்சன் வரை நம்மை யாரும் கண்டுக்கமாட்டாங்க.புள்ளைகுட்டிகளை போய் படிக்க வைப்போம் வாங்க:)

வியாழன், 15 மே, 2014

த்ரிஷ்யம் விமர்சனம்

 இந்த படத்தை பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு முன் "கீபோர்ட் தேயத்தேய எல்லாரும் இந்த படத்தை பத்தை எழுதிட்டாங்க..கண்ணு எரியஎரிய நாமளும் எல்லாத்தையும் படிச்சு களைச்சாச்சு!இதுக்கு மேலேயும் இந்த படத்தை பத்தி எழுதணுமான்னு" ஒரு எண்ணம் வந்தது என்னவோ உண்மை.ஆனாலும் தெரியாத்தனமா ஏதாவது ஒரு சூரமொக்கை படத்துக்கு போயி வெளில வந்ததும்..பிரெண்ட்ஸ்க்கு போனை போட்டு "மாப்ள தயவுசெஞ்சு அந்த படத்துக்கு போயிறாதரா...த்தா சாவடிச்சுட்டானுக" என எப்படி பொங்குகிறோமோ அதே மாதிரி ஒரு நல்ல படைப்பை பார்த்து அது மனதிற்கு பிடித்துபோய்விட்டால்,அதை தனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதும் ஒரு சினிமா ரசிகனின் கடைமைதான்.அதுமட்டுமில்லாது ஒரு நல்ல படைப்பை பாராட்டுவதையும்,கொண்டாடுவதையும் விட வேறெப்படி அந்த படைப்பிற்கு மரியாதை செலுத்திவிட முடியும்?!


இந்த படம் மொத்தம் ரெண்டே முக்கால் மணிநேரம்.இப்பல்லாம் ரெண்டேகால் மணிநேரத்திற்கு அதிகமாக ஒரு படம் ஓடினாலே மக்கள் கடுப்பாக ஆரம்பிச்சிடுறாங்க.அந்த அளவுக்கு யாருக்கும் பொறுமை இல்லாமல் போய்விட்டது...இரண்டே முக்கால் மணிநேரம் ஒரு ரசிகனை போரடிக்காமல் உட்கார வைக்கவேண்டும்.அதைவிடவும் முக்கியம் அத்தனை மணிநேரம் செலவு செய்வதற்க்கு அந்த படம் ஒர்த்'தாக இருக்கவேண்டும்.த்ரிஷ்யம் பட இயக்குனர் 'ஜீது ஜோசப்' தனது அபாரமான திரைக்கதையால் அதை அசால்ட்டாக செய்து காட்டியிருக்கிறார்.

கணவன்,மனைவி இரண்டு பெண் குழந்தைகள் என அழகான ஒரு குடும்பம்.அது தங்களுக்காக படைக்கப்பட்ட சொர்க்கம் என சந்தோசமாய் வாழ்பவர்களின் வாழ்க்கையில் ஒரு புது நபர் உள்ளே நுழைய அதனால் ஏற்படும் பிரச்சனை,சராசரி குடும்பஸ்தனான மோகன்லால் அந்த பிரச்னையை அதுவும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக எப்படி எதிர்க்கொண்டு சமாளிக்கிறார் என்பதுதான் கதை.லாலேட்டன் நன்றாக நடித்திருக்கிறார் என்று எழுதினால் அது நூற்றாண்டு கிளிசேத்தனமாய் மாறிவிடும்.ஆனாலும் வேறு வழியில்லை.மனுஷன் பின்னியிருக்கிறார்.குறிப்பாய் அவர் கதாப்பாத்திரத்தை வடிவமைத்த விதம் கிளாஸ்..கேபிள் டிவி நடத்தும் மனிதராய் வருகிறார்.சினிமா வெறியர்.இன்னைக்கு வீட்டுக்கு வரல கடையிலேயே படுத்துக்கிறேன் என வீட்டில் சொல்லிவிட்டு..இரவு டிவியில் பலான பாடலை பார்த்ததும் மூடாகி கட்டுபடுத்த முடியாமல் வீட்டுக்கு போயி மனைவியிடம் வழிவதும்,காலையில் சின்னமகள் 'ஏன்ப்பா நைட்டு வரமாட்டேன் சொல்லிட்டு அப்புறம் வந்தீங்க?' என கேட்கையில் சமாளித்து மலுப்புவதுமாய் லாலேட்டேன் எல்லா பந்திலும் சிக்சர் அடித்திருக்கிறார்.

படம் ஆரம்பித்து ஒரு மணிநேரம் வரை 'ச்சே என்ன ஒரு அழகான சந்தோசமான குடும்பம்..கடைசிவரை இப்படியே இருக்கனும்'என நாம் நினைக்கையிலேயே மூத்த பெண் வடிவில் சிக்கல் வர,அங்கு திரியை பற்ற வைக்கிறார் இயக்குனர்.அது கொஞ்சகொஞ்சமாய் பரவ ஆரம்பித்து இடைவேளைக்கு பின் வெடித்து சிதறுகிறது.

பாராட்டுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும் சில நெருடல்களும் இருக்கவே செய்தன.என்னதான் லாலேட்டன் எல்லா படங்களையும் பார்த்து பல விஷயங்கள் தெரிந்தவரை காண்பிக்கப்பட்டாலும்..ஒரு கொலையை மறைக்க இத்தனை நேர்த்தியாய் ஒரு சாதாரண மனிதனால் யோசிக்கமுடியுமா என்று தோன்றியது.புதிதாய் கட்டிகொண்டிருக்கும் காவல் நிலையம் என்றாலும் மோகன்லால் வருவதையோ,அல்லது புதைத்துவிட்டு போவதையோ எந்த காவலர்களும் பார்க்கவேயில்லை என்பது சற்றே உறுத்தியது.

இதுவேற இல்லாம இது எந்த படத்தோட உருவல்ன்னு ஒரு தனிப்படையே அமைச்சி ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்காங்க.எது எப்படியோ இது ஒரு பரபர த்ரில்லர் மூவி.எல்லாரும் பாத்துருப்பிங்க.பாக்காதவங்க கண்டிப்பா பாருங்க.ஆஹா மீனாவை பத்தி சொல்லாம விட்டுட்டனே!என்ன சொல்றது ஆன்ட்டி ஆனாலும் இன்னும் உங்க அழகு உங்களை விட்டு போவலைங்க..ஹிஹி

எழுதி முடிச்சிட்டு படிச்சி பாத்தா பல இடங்கள்ல ஜாக்கி'த்தனம் எனக்கே அப்பட்டமா தெரிஞ்சிது.என்ன பண்றது,அதை படிச்சி வளந்தவிங்க தானே நாமெல்லாம்..நாடி நரம்புல எல்லாம் அது கலந்திருக்கத்தான் செய்யும்! :-)